பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்? - விளக்கம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி

பிறந்தநாளன்று பட்டாக்கத்தியால் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் சேதுபதி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது ஏன்?  - விளக்கம் கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி
x
பிறந்தநாளை ரவுடிகள் அரிவாளாலும், பட்டாக்கத்தியாலும் வெட்டி அதை இணையத்தில் வெளியிட்ட சம்பவங்களும், அதுதொடர்பான கைது நிகழ்வுகளும் தமிழகத்தில் அடிக்கடி அரங்கேறி வந்தன. சென்னை புறநகர் பகுதியில் ஒன்றாக திரண்ட ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சூழ கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கலந்து கொண்ட ரவுடி பினு உள்ளிட்ட பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் பலரும் அரிவாளால் கேக் வெட்டி டிக் டாக் உள்ளிட்ட பக்கங்களில் பகிர்ந்தனர். அவர்களும் அடுத்தடுத்து  போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பலர் மீது உடனடியாக நடவடிக்கைகளும் பாய்ந்தன. இந்த நிலையில் தான் நடிகர் விஜய் சேதுபதி, பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய 43 வது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் விஜய் சேதுபதி. அப்போது பட்டாக்கத்தியால் அவர் கேக் வெட்டிய புகைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புக்குரல் கிளம்பியது.. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி தன் தரப்பு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டார். அதில் தன்னுடைய பிறந்தநாளை பட்டாக்கத்தியால் வெட்டும் படம் விவாதத்திற்கு உள்ளாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் பட்டாக்கத்தி முக்கிய கதாபாத்திரமாக உள்ளதாகவும், அந்த படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடியதால் அதே பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டியதாகவும் விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார். இது ஒரு தவறான முன் உதாரணமாகி விடும் என பலரும் கருத்து தெரிவித்து இப்போது விவாதப் பொருளாகி இருப்பதால் இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்