"நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள், வளர்பிறையில் கறை எதற்கு?" - நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தமது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து தமது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கலையாளர் விஜய் சேதுபதிக்கு என்று தொடங்கும் அப்பதிவில் , சில நேரங்களில் செய்து எய்தும் புகழை விட செய்யாமல் எய்தும்
புகழே பெரிதினும் பெரிது செய்யும் என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள் என்று நடிகர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டுள்ள கவிஞர் வைரமுத்து , வளர்பிறையில் கறை எதற்கு என்றும், இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம் என்றும் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி விவேகி என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
"விஜய்சேதுபதி தீராத அவப்பழிக்கு ஆளாகி விடக்கூடாது" - வைகோ
முத்தையா முரளிதரன் வாழ்க்கையை சித்தரிக்கும் 800 திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க போகிறார் என்ற செய்தி தமிழர்தம் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டுகிறது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்கிற தீராத அவப்பழிக்கு ஆளாகிவிடக்கூடாது என்றும் , 800 திரைப்படத்தில் நடிப்பதை விஜய்சேதுபதி தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"800 திரைப்படத்திலிருந்து வெளியேற வேண்டும்" - விஜய்சேதுபதிக்கு திருமாவளவன் கோரிக்கை
முத்தையா முரளிதரன் தொடர்பான சர்ச்சைக்குரிய 800 படத்தில் நடிக்கவேண்டாம் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை ஒரு கலைஞரின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு என கருதவேண்டாம் என்று தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள திருமாவளவன் கோடிக்கணக்கான தமிழர்களின் ஆறாத பெருவலி என்றும், இதை உணர்ந்து விஜய் சேதுபதி வெளியேற வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story