சொன்னதை செயலாக மாற்றிக் காட்டிய நடிகை ஜோதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்

தான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா உதவிகள் செய்திருப்பதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது
சொன்னதை செயலாக மாற்றிக் காட்டிய நடிகை ஜோதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்
x
கடந்த சில மாதங்களுக்கு முன் சினிமா விருது தொடர்பான விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை கோயில் குறித்து பேசினார். பிரகதீஸ்வரர் கோயில் குறித்த அனுபவங்களை பேசிய அவர், அருகே உள்ள மருத்துவமனையின் நிலை குறித்து தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார். கோயிலுக்கு செலவு செய்வது போல, மருத்துவமனைக்கும், பள்ளிகளுக்கும் செலவிடுங்கள் என ஜோதிகா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது... 

ஜோதிகாவின் இந்த கருத்துக்கு இந்து அமைப்புகள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. சமூக வலைதளங்களில் ஜோதிகாவை விமர்சனம் செய்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இந்துக்களின் மனதை ஜோதிகா புண்படுத்திவிட்டார் என கண்டன குரல்களும் ஓங்கி ஒலித்தன. ஆனால் ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்றும், அன்பை விதைப்போம் என்றும் திடமாக நின்றார் கணவர் சூர்யா. அதேநேரம் ஜோதிகாவுக்கு விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சியினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும், சமூகவலைதளங்களில் ஜோதிகாவுக்கு எதிரான விமர்சனங்களும், ஆதரவு கருத்துக்களும் தொடர்கின்றன. 

இந்நிலையில், தான் கூறியதை வெறும் சொல்லாக மட்டுமின்றி அதை செயலாக மாற்றியிருக்கிறார் நடிகை ஜோதிகா. தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையை நம்பி பல மாவட்ட மக்கள் உள்ள நிலையில், அந்த மருத்துவமனைக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் ஜோதிகா. குழந்தைகள் மருத்துவமனையாக உள்ள இந்த ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததை அறிந்த ஜோதிகா, அங்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்க 25 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார். 

அகரம் அறக்கட்டளை வாயிலாக இதற்கான நிதியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இயக்குநர் இரா. சரவணன் வழங்கினார். அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விளையாடுவதற்கான திடல், குழந்தைகள் உள்ள பிரிவில் வண்ண வண்ண ஓவியங்கள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்து மருத்துவமனையின் சூழலையே கண்ணுக்கு இனிமையாக மாற்றியிருக்கிறார் நடிகை ஜோதிகா. இது முதல் கட்ட உதவிதான் என்றும், இனி வரும் நாட்களிலும் ஜோதிகா பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவார் என்றும் அவர் தரப்பில் கூறப்படுகிறது. 

ஜோதிகாவின் இந்த செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பேச்சோடு நிறுத்திக் கொள்வோர் மத்தியில் தான் சொன்னதை செயலாக மாற்றி நிஜத்திலும் பொன் மகளாக ஜொலிக்கிறார் நடிகை ஜோதிகா....

Next Story

மேலும் செய்திகள்