இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் - தந்தை புகாரின் அடிப்படையில் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் தொடர்பாக நடிகையும், அவரது காதலியுமான ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவம் - தந்தை புகாரின் அடிப்படையில் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு
x
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை  சம்பவம் தொடர்பாக நடிகையும், அவரது காதலியுமான ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து ரியாவுக்கு 15 கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் மும்பை போலீசார், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர்கள் உள்பட 38 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், சுஷாந்திடம்  நிதி முறைகேட்டில் ஈடுபட்டு, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக பாட்னாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கடந்த ஒரு வருடமாக, சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து ரியாவுக்கு 15 கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுஷாந்தின் வங்கி கடன் அட்டைகள், வங்கி கணக்குகளை, ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி, சுஷாந்த்தை விட்டு ரியா பிரிந்து சென்றதாகவும் அப்போது வீட்டில் இருந்த ரொக்கப்பணம், மற்றும் நகைகளை எடுத்து சென்றதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது, சுஷாந்தின் மருத்துவ அறிக்கைகளையும், பொது வெளியில் வெளியிட போவதாக ரியா மிரட்டியதாகவும், சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும் போலீசார் விடுத்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுஷாந்த் மரண வழக்கு தொடர்பாக ஆவணங்களை பெறுவதற்காக, பீகார் போலீசார் மும்பை விரைந்துள்ளனர். 

ரியா மீது, சுஷாந்த்தின் தந்தை அளித்துள்ள புகார் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்தின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஹேஷ்டாக்கும், டுவிட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, சிபிஐ விசாரணையை தவிர மாற்று வழியில்லை என கருத்து கூறியுள்ளார். சுஷாந்தின் மரண விவகாரம், இந்தி திரை உலகில் பெரும் புயலை கிளப்பி யிருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்